100 விசைப்படகுகளில் சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர்: டன் கணக்கில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி

நாகை: தடைக்காலம் முடிவடைந்து நாகை விசைப்படகு மீனவர்கள் கடந்த 14ம் தேதி இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடந்த 3 நாட்களாக கடலில் தங்கி மீன் பிடித்தனர். இவர்களது வலைகளில் வஞ்சிரம், வாவல், விளைமீன், கனவா, பாறை நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் டன் கணக்கில் சிக்கியது. இதையடுத்து நாகை துறைமுகத்துக்கு 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று காலை வந்தனர். மீன்களை வாங்கி செல்ல வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர்.

கரைக்கு கொண்டு வரப்பட்ட ஏற்றுமதி ரக மீன்களான கொடுவா, வாவல், வஞ்சிரம், இறால், நண்டுகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வாங்கினர். வஞ்சிரம் கிலோ ரூ.1,400, வாவல் ரூ.950, விளைமீன் ரூ.550, பாறை ரூ.450, நண்டு ரூ.600, இறால் ரூ.350 முதல் ரூ.500 வரை, கனவா ரூ.250 முதல் ரூ.450 வரை, சங்கரா ரூ.350, கொடுவா ரூ.600, கடல் விரா ரூ.670, ஊளி ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்டது. தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்றபோது அதிகளவில் மீன்கள் சிக்கியதாலும், உரிய விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post 100 விசைப்படகுகளில் சென்ற நாகை மீனவர்கள் கரை திரும்பினர்: டன் கணக்கில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: