தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யாததால் பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது: ஐகோர்ட்டில் எக்கோ நிறுவனம் வாதம்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளதாகக் கூறி எக்கோ நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பளம் கொடுத்து இசை சேவையை பெறும் தயாரிப்பாளர்தான் முதல் காப்புரிமை உரிமையாளராகிறார்.

பதிப்புரிமை உரிமைதாரரான பட தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்து 4,500 பாடல்களை எக்கோ நிறுவனம் வாங்கியுள்ளது. இளையராஜாவுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இருப்பினும், 1990ம் ஆண்டு வரை இளையராஜாவுக்கு ராயல்டி வழங்கி வந்தோம். அதன்பின் ராயல்டி நிறுத்தப்பட்டது. ராயல்டி வழங்குவது நிறுத்தப்பட்டதை எதிர்த்து எக்கோ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும்தான் இசையமைப்பாளருக்கு தார்மீக உரிமை வரும். சமீபத்தில் தனது பாடல் திரிக்கப்பட்டதாக மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்றார். அப்போது நீதிபதிகள், இளையராஜாவை கவுரவப்படுத்தியுள்ளதாக மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனரும், தயாரிப்பாளரும் கூறியுள்ளனர் என்றனர். தொடர்ந்து, எக்கோ தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை.

ஆனால், இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கி விட்டார். உரிமையை வைத்திருக்க விரும்பினால் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். எந்த ஒப்பந்தமும் செய்யாத நிலையில் இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது என்று வாதிட்டார். எக்கோ தரப்பு வாதங்கள் முடிந்ததை தொடர்ந்து இளையராஜா தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்யாததால் பாடல்கள் மீது இளையராஜா உரிமை கோர முடியாது: ஐகோர்ட்டில் எக்கோ நிறுவனம் வாதம் appeared first on Dinakaran.

Related Stories: