வெயில், மழையில் கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தியை எதிர்கட்சித் தலைவராக கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் என்ற கொடிய எமனை அகற்றியாக வேண்டும். நீட் தேர்வால் ஆண்டுதோறும் தற்கொலை அதிகரித்து வருகிறது. எதற்காக பாஜக மவுனம் காக்கிறது. யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆகக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்., பாஜக தான் முடிவு செய்கிறார்கள். இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை தீவிரவாதிகள் கொன்றார்கள்.

நாளை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 1,500 பேர் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் ஒன்றிய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு நீதி. தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு நீதியா? வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய தமிழிசை சவுந்தரராஜனை பாஜக கைவிட்டுவிட்டது. இவ்வாறு கூறினார். இந்த பேட்டியின்போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு உள்பட பலர் இருந்தனர்.

The post வெயில், மழையில் கட்சி பணியாற்றிய தமிழிசையை பாஜ கைவிட்டுவிட்டது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: