சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை என சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த பதில் மனுவில், சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை, அறிவுரை கழகத்தின் ஆய்வுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

அறிவுரை கழகத்தை அணுகாமல் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சங்கரை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் போது, பல தரப்பினரும் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு, சங்கர் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில்தான் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று விட்ட அவர், மற்ற வழக்குகளிலும் ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்ததாலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதைத் தடுக்கவும்தான் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு காயம் ஏற்படுத்த சிறைத் துறையினருக்கு எந்த காரணமும் இல்லை எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: