வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் குப்பைகள் எரிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு


வேலூர்: வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் குப்பைகளை கொட்டி எரிக்கப்படுவதால், புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு 3சக்கர சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ, லாரிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகளை சேகரித்து அதனை உரிய முறையில் தரம் பிரித்து வழங்கி மறு சுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால், குப்பைகளை திடக்கழி மேலாண்மை பகுதிக்கு எடுத்து செல்லாமல், ஒரு சிலர் காலியாக உள்ள இடங்களில் கொட்டி விடுகின்றனர் என்ற புகார் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், குப்பைகளை மர்ம ஆசாமிகள் தீ வைத்த எரித்து விடுகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் குப்பைகளை கொட்டி எரிக்கப்படுகிறது. இதனால், வசந்தபுரம், கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வழியாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் புகை மண்டலத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குப்பைகளை எரித்தால் காற்று மாசு ஏற்படும் என்பதை வலியுறுத்தி இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் குப்பைகளை எரிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இதை தடுத்து நிறுத்தி குப்பைகளை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் பின்புறம் குப்பைகள் எரிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: