ராமேஸ்வரத்தில் டிச.30ம் தேதி காசி தமிழ் சங்கம நிறைவு விழா துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் டிச.30ம் தேதி நடக்கவுள்ள காசி தமிழ் சங்கம நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் 4வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த டிச.2ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் வரும் 30ம் தேதி நடக்க உள்ளது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.

இதற்காக அவர், 30ம் தேதி மதியம் 3 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய பாஜ தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Related Stories: