சென்னை: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான தேர்வர்கள் விடுபட்ட, சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசத்தை டிஎன்பிஎஸ்சி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முக தேர்வு பதவிகள்) உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழகளை சில குறைபாடுகளுடன், சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே. இத்தகைய தேர்வர்களுக்கு இறுதிவாய்ப்பு வழங்கும் விதமாக 27ம் தேதி(இன்று) முதல் வரும் 5ம் தேதி இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் குறிப்பாணை மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
