2024 மக்களவை தேர்தல் வளர்ச்சிக்கும், ஜிகாத்துக்குமான போட்டி: அமித்ஷா சொல்கிறார்


ஐதராபாத்: தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள போங்கிர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, “கடந்த 10 ஆண்டுகளாக மோடி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வருகிறார். இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை. ஆனால், மோடி மீண்டும் பிரதமரானால் இடஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவார் என காங்கிரஸ் பொய் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சிதான் பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துள்ளது.

காங்கிரஸ், பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலை செய்து வருகின்றன. இவர்கள் ராம நவமி ஊர்வலத்தை, ஐதராபாத் விடுதலை நாள் கொண்டாட்டத்தை அனுமதிக்கவில்லை. இவர்கள் சிஏஏவை எதிர்க்கின்றனர். இந்த கட்சிகள் ஷரியா, குரான் அடிப்படையில் தெலங்கானாவை ஆட்சி செய்ய விரும்புகிறார்கள்” என்று கடுமையாக சாடினார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, “2024 மக்களவை தேர்தல் ராகுல் காந்தி, மோடிக்கு இடையேயான தேர்தல். வளர்ச்சிக்கும், ஜிகாத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். ராகுல் காந்தியின் சீன உத்தரவாதம், மோடியின் பாரதிய உத்தரவாதத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல்” என்று விளக்கம் அளித்தார்.

The post 2024 மக்களவை தேர்தல் வளர்ச்சிக்கும், ஜிகாத்துக்குமான போட்டி: அமித்ஷா சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: