உபியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜ வெற்றி பெறும்: ராகுல் காந்தி கணிப்பு

பிரயாக்ராஜ்: ‘உத்தரப்பிரதேசத்தில் பாஜ ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும்’ என ராகுல் காந்தி கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இந்தியா கூட்டணி வேட்பாளரான சமாஜ்வாடி கட்சியின் உஜ்வால் ராமன் சிங்கை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக கலந்து கொண்டு பேசினர். அப்போது ராகுல் பேசியதாவது:

நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜ வெற்றி பெறப் போகிறது. அது பிரதமர் மோடியின் கியோட்டோ தொகுதி (வாரணாசியை ஜப்பானின் கியோட்டோ நகரைப் போல மாற்றிக் காட்டுவேன் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார். அதை கேலி செய்யும் வகையில் ராகுல் கியோட்டோ என குறிப்பிட்டார்). இந்த தேர்தல் அரசியலமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டம். பாஜவும், ஆர்எஸ்எஸ்சும் அரசியலமைப்பை தாக்குகின்றன. எந்த சக்தியாலும் அரசியலமைப்பை கிழித்து எறிய முடியாது என்பதை நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவோம். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவோம். அக்னிவீரர் திட்டத்தை குப்பை தொட்டியில் தூக்கி எறிவோம். ராணுவத்தில் பழைய முறையப்படியே வீரர்கள் தேர்வு நடைபெற நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கூறினார். புல்பூர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் கூட்டம் அலைமோதியது. போலீசாரின் பாதுகாப்பு அரண்களை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி தொண்டர்கள் முண்டியடித்தனர். இதனால் ராகுல், அகி லேஷ் யாதவ் பிரசாரம் செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

The post உபியில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜ வெற்றி பெறும்: ராகுல் காந்தி கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: