சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு

ஆத்தூர்: சேலத்தில் பாஜ மாவட்டத்தலைவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் நிர்வாகி, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவராக இருப்பவர் சண்முகநாதன். இவர், நாடாளுமன்ற தேர்தலின் போது, கட்சி தலைமை வழங்கிய பணத்தை சுருட்டிக்கொண்டதாக கடந்த 1ம் தேதி ஆத்தூர் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. கட்சியில் தனக்கு எதிராக செயல்படும் சிலர் திட்டமிட்டு இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகநாதன் சார்பில் பாஜ ஆத்தூர் நகரதலைவரான சுதாகர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் நரசிங்கபுரம் நகர பாஜ மகளிரணி செயலாளராக இருந்த அனிதா உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து சண்முகநாதன் நீக்கினார். அதேநேரத்தில் அனிதா, ஆத்தூர் டவுன் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், ‘கடந்த மாதம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாமக அலுவலகத்தில் இருந்தேன். அப்போது பாஜ நகர தலைவர் சுதாகர், என்னை மிரட்டி தகாத முறையில் நடந்து கொண்டார். அதை நான் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். ஆனால், மாவட்ட தலைவரின் மெத்தனபோக்காலும், அவருக்கு வலதுகரமாக இருப்பதாலும் சுதாகர், நரசிங்கபுரம் நகருக்குள் இருக்கும் ஒரு சில மகளிரிடம் தகாத முறையில் நடந்துகொள்வதுடன், அவர்களை அசிங்கமாக திட்டியும் வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறியுள்ளார்.

இதேபோல், சேலம் கிழக்கு மாவட்ட பாஜ கலை கலாச்சார பிரிவின் மாவட்ட செயலாளர் விஜயலட்சுமியிம், சுதாகர் மீது ஆத்தூர் நகர போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலியல் புகார் தெரிவித்த விஜயலட்சுமி திடீரென மாயமாகி விட்டார். அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை தேடி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜயலட்சுமி பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தன் மீதான புகாரால் மிகுந்த மனவேதனையில் இருக்கிறேன். எனது கணவர், குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள். நான் தற்கொலை செய்து கொள்ள இருக்கிறேன்’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து விஜயலட்சுமியின் கணவர் சுரேஷ்மணி, ஆத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனது மனைவி ஆடியோ வெளியிட்ட நிலையில் திடீரென மாயமாகி இருக்கிறார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: