ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில் பரபரப்பு பாஜ எம்பி வேட்பாளரை தாக்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்: போலீஸ் வாகனங்களையும் உடைத்தனர்

திருமலை: ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளியில் பாஜக எம்பி வேட்பாளர் மீது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி கான்வாய்கள், போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளியில் துணை முதல்வர் புடி முத்யாலாவின் சொந்த ஊரான மதுகுளா மண்டலத்தில் தருவாலாவில் உள்ள அவரது வீட்டை பாஜக நிர்வாகிகள் 2 நாட்களுக்கு முன்பு டிரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினரை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்தவர்களை பார்க்க அனகாப்பள்ளி தொகுதி பாஜ வேட்பாளர் சி.எம்.ரமேஷ் நேற்று முன்தினம் அங்கு சென்றார். இதையறிந்து அங்கு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சி.எம்.ரமேஷின் கான்வாய் வாகனங்கள் மீதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தாக்குதல் நடத்தினர். இதில் 3 கார்கள் சேதமடைந்தது.

இதனையடுத்து சி.எம்.ரமேஷை போலீசார், அவர்களது வாகனத்தில் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, போலீஸ் வாகனம் மீதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். அப்போது போலீசார் முன்னிலையில் பாஜக வேட்பாளர் சி.எம்.ரமேஷையும் கற்களாலும், கைகளாலும் தாக்கியதால் அவரது சட்டை கிழிந்தது. தொடர்ந்து போலீசார் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளியில் பரபரப்பு பாஜ எம்பி வேட்பாளரை தாக்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர்: போலீஸ் வாகனங்களையும் உடைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: