இரட்டை இலை சின்னத்தை முடக்க சதி: எட்டப்பன்களின் சதியை மக்கள் ஆதரவுடன் முறியடித்தோம்: எடப்பாடி பேச்சு

திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக, தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற செய்து முதன்மை மாநிலமாக உருவாக்கி உள்ளது.

ஒன்றிய அரசிடம் இருந்து பல்வேறு திட்டங்களை பெற்று மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக கருப்பையா இருப்பார். பாஜ கட்சியில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம். ஆனால் எங்களுக்குள் கள்ளக்கூட்டணி என கூறி வருகிறார்கள். நாங்கள் ஏன் கள்ளக்கூட்டணி வைத்துக்கொள்ள போகிறோம். வேண்டுமானால் நேரடியாக கூட்டணி வைத்திருப்போம். சிந்தித்து பாருங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு நாங்கள் வரவேண்டும் என்றால் நாங்கள் பாஜ-வுடன் கூட்டணியை தொடர்ந்திருப்போம்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எங்களுக்கு நல்ல பாடத்தை நடத்திவிட்டு சென்றுள்ளனர். சில எட்டப்பன்கள் இருந்து கொண்டு கட்சி சின்னத்தை முடக்கிவிட வேண்டும் என நினைத்தார்கள்.அதனை மக்கள் சக்தியுடன் நாங்கள் முறியடித்தோம். எம்ஜிஆர், ஜெயலலிதா தெய்வங்களாக இருந்து எங்களை காத்து வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் சேவையில் முதலில் நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இரட்டை இலை சின்னத்தை முடக்க சதி: எட்டப்பன்களின் சதியை மக்கள் ஆதரவுடன் முறியடித்தோம்: எடப்பாடி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: