பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு

 

கோவை, மார்ச் 26: கோவை மாவட்டத்தில் ஆட்டோ மொபைல்ஸ், பவுண்டரி, மில், பம்பு உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகிறது. பல்வேறு வியாபாரங்களும் நடக்கிறது. தினமும் வியாபாரம், விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் பொருட்கள், பணத்தை பறக்கும் படையினர் சோதிப்பதால் வியாபாரிகள் தவிப்படைந்துள்ளனர். தினமும் 2 லட்ச ரூபாய் வரை பணம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் ஏற்கவில்லை.

50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் இருந்தால் அதை பறிமுதல் செய்வதால் வியாபாரிகள் தவிப்படைந்துள்ளனர். அதிலும் பத்திரம், மொத்த வேட்டி, சேலை வியாபார கடைகளை தேர்தல் பிரிவினர் கண்காணித்து வருவதால் அவர்கள் பொருட்களை சப்ளை செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். ஓட்டுக்காக பணம், தங்க காசு, பாத்திரம், வேட்டி சேலை வழங்க திட்டமிட்டிருப்பதாக தேர்தல் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் படி இந்த பரிசு பொருட்கள் பதுக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க சோதனையை தீவிரமாக்கியுள்ளனர். கடும் சோதனையால் மாவட்ட அளவில் வணிக, வர்த்தக, வியாபார அமைப்புகள் பணத்தை அனுப்ப மறுத்து வருகின்றனர். சிலர் தேர்தல் முடியும் வரை பிசினஸ் வரவு செலவுகளை ஒத்தி வைத்துள்ளனர். வங்கிகளில் பல லட்ச ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்தால் சட்டமன்ற தொகுதி வாரியாக பட்டியல் தயாரித்து வருமான வரித்துறை மூலமாக தகவல் தெரிவித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

The post பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: