குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா

 

காரமடை, மார்ச் 24: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஒன்றாக காரமடை அடுத்துள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. சரியாக காலை 11:50 மணியளவில் சேவற்கொடி உருவம் பொறிக்கப்பட்ட கொடியானது பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. மறுநாள் திங்களன்று காலை 6.45 மணியளவில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு அன்றைய தினம் மாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் வனிதா, திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மோகனப்பிரியா, உறுப்பினர்கள் குழந்தை வேலு, சுரேஷ்குமார், சாவித்திரி, முருகன், மருதூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூர்ணிமா ரங்கராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ரங்கராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: