காரமடை காந்தி நகரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

 

காரமடை, மார்ச் 23: நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் கோபாலன்(64). இவரது மனைவி மாலதி(58). கோபாலன் சில ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் மாலதி தற்போது தனது அக்கா மணியம்மாள்(74) என்பவருடன் காரமடை காந்திநகர் அத்வைத் அவென்யூவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 17ம் தேதி மாலதி தனது அக்கா மணியம்மாளுடன் ஊட்டியில் நடந்த திருவிழாவிற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அக்காளுடன் வீடு திரும்பிய மாலதி வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 10 1/2 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மாலதி காரமடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான காவல்துறையினர் கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோவையில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அவர்களும் கைரேகை மாதிரிகளை எடுத்துச்சென்றனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிந்து அக்கம்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காரமடை காந்தி நகரில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: