வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு..!!

சென்னை: வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும். ஜன.1, 2024-ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலை புதுப்பித்து இறுதி செய்ய வேண்டும். பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றி, அதன் நகல் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அலுவலர்களுக்கு 4 கட்ட பயிற்சி
மக்களவை தேர்தலில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு 4 கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சத்யபிரத சாகு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; மார்ச் 24-ம் தேதி முதல் கட்ட பயிற்சியும், ஏப்.7-ம் தேதி இரண்டாவது கட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. ஏப்.16-ம் தேதி மூன்றாவது கட்ட பயிற்சியும், ஏப். 18-ம் தேதி நான்காவது கட்ட பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

 

The post வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: