திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில், 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் 74,351 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 34,164 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.3.04 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். நேற்றைய நிலவரப்படி கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பியது. இதனால் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரமுள்ள ஏடிசி கட்டிடம் வரை நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

இவர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலியால் சிபாரிசு கடிதத்தில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மதியத்திற்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கும் நேரம் படிப்படியாக குறைய தொடங்கியது. மேலும் ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

The post திருப்பதியில் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: