பிஎன்பி பாரிபா ஓபன்: கார்லோஸ் அல்கராஸுடன் மெத்வதேவ் பலப்பரீட்சை

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட, ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் தகுதி பெற்றார். அரையிறுதியில் இத்தாலியின் யானிக் சின்னருடன் (22 வயது, 3வது ரேங்க்) மோதிய நடப்பு சாம்பியன் அல்கராஸ் (20 வயது, 2வது ரேங்க்) 1-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 5 நிமிடத்துக்கு நீடித்தது. தொடர்ச்சியாக 19 போட்டிகளில் வென்றிருந்த யானிக் சின்னரின் வெற்றிப் பயணத்துக்கு பாரிபா ஓபன் அரையிறுதியில் அல்கராஸ் முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் 1-6, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டாமி பவுலை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் அல்கராஸ் – மெத்வதேவ் மோத உள்ளனர். கடந்த ஆண்டு பைனலிலும் இவர்கள் இருவருமே பலப்பரீட்சை நடத்தினர். அந்த போட்டியில் அல்கராஸ் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இதுவரை அல்கராஸ் உடன் 5 முறை மோதியுள்ள மெத்வதேவ் 2-3 என பின்தங்கியுள்ளார்.

The post பிஎன்பி பாரிபா ஓபன்: கார்லோஸ் அல்கராஸுடன் மெத்வதேவ் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: