சஞ்சய் சிங் ஜாமீன் மேல்முறையீடு அமலாக்க துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் உள்ள அவர், ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்களில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறி ஜாமீன் வழங்க கேட்டார். ஆனால், இந்த வழக்கின் சதியில் ஈடுபட்ட முக்கிய நபர் என்றும், அவர் லஞ்சப்பணமாக ரூ.2 கோடி பெற்றுள்ளார் என்றும் அமலாக்கத்துறை கூறியிருந்தது. அதோடு, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களான தொழிலதிபர்கள் தினேஷ் அரோரா மற்றும் அமித் அரோரா ஆகியோருடன் சிங் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் வாதிட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இந்த வழக்கில் இந்த நேரத்தில் ஜாமீன் வழங்குவது பொருத்தமாக இருக்காது என்றும் விசாரணையை பாதிக்கும் என்றும் கூறி கடந்த பிப்ரவரி 7ம் தேதியன்று ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சிங் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சிங்கின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். அதோடு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் தன்னை சேர்த்துள்ளதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க சிங் கோரிக்கை விடுத்தார்.
இதனை நீதிமன்றம் ஏற்று ஒன்றாக விசாரிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

The post சஞ்சய் சிங் ஜாமீன் மேல்முறையீடு அமலாக்க துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: