இதுதொடர்பாக, பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழுவின், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ், உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரியார் பல்கலைக்கழக செனட் கூட்டம் நாளை (13ம் தேதி) நடைபெறுவதாக அறிவித்துள்ளது. அன்றைய தினமே ஆட்சிமன்ற, ஆசிரியர் தொகுதியில் ஏற்பட்ட காலி இடத்திற்கான தேர்தலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. ஆட்சிமன்ற குழுவின் காலம் முடியும் தருவாயில், உள்நோக்கத்தோடு ஆசிரியர் தொகுதியில் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்ப நிர்வாகம் முயற்சிக்கிறது. இது இடைக்காலத்திற்கான தேர்தலாக நடத்தப்படாமல், முழுமையான காலத்திற்கு இப்படி தனித்தனியாக தேர்தல் நடத்தும்போது, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமான சூழலை உருவாக்கி, சுயஆதாயம் பெறும் மோசடி இதில் உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்கள், இத்தேர்தலில் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்பதே நோக்கமாக உள்ளது.
சுயநிதி கல்லூரி தற்காலிக ஆசிரியர்களை கைபாவைகளாக ஆக்கிக்கொள்ளலாம் என்ற சதியே, இதன் பின்புலனாக இருக்கக்கூடும் எனும் சந்தேகத்திற்கு வலு சேர்க்கிறது. அதேசமயம், பேரவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலிலும் கூட குளறுபடிகள் உள்ளன. குறிப்பாக, தற்போது கல்லூரிகளில் பணிபுரியாத ஆசிரியர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. மரபுகளை மாற்றி, தேர்தல் நடைபெறும் நாளிலேயே பொருள் நிரல்களுடன் கூடிய, பேரவைக் கூட்டத்தையும் கூட்டுவதன் மூலம், பேரவைக் கூட்டத்தையும், தேர்தலையும் நீர்த்துப்போக செய்யும் தந்திரம் உள்ளது. குறிப்பாக, இன்றைக்கு பல்கலைக்கழகமே வெட்கித் தலைகுனியும் பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில், அனைத்தையும் இருட்டடிப்பு செய்ய, குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ள ஏதுவான செயல்களைச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இச்சூழலில் இந்த அவசரத் தேர்தல், பல்கலைக்கழகத்திற்கு செலவையும், களங்கத்தையும் மட்டுமே ஏற்படுத்தும். எனவே, அரசு தலையிட்டு இத்தேர்தலை தடைசெய்து, உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர் தேர்தல் நடத்த பேராசிரியர்கள் எதிர்ப்பு: பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.