திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, அந்த விழாவிலேயே பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கவும் உள்ளார். தொடர்ந்து திருச்சி என்ஐடியில் ₹41 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் அதிநவீன வசதிகள் கொண்ட ‘அமெதிஸ்ட்’ என்ற மாணவர்கள் தங்கும் விடுதியை துவக்கி வைக்கிறார். செங்கோட்டை – தென்காசி ஜங்சன்- திருநெல்வேலி- திருச்செந்துார், விருதுநகர்- தென்காசி ஜங்சன் இடையிலான மின் மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களையும், 41.1 கிமீ கொண்ட சேலம்-மேக்னசைட் ஜங்சன்-ஓமலூர்-மேட்டூர் அணை, 160 கிமீ தூரம் கொண்ட மதுரை-தூத்துக்குடி இரட்டை ரயில் பாதையையும் அவர் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தொடர்ந்து திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய இரவு நேர விமான சேவையையும் துவக்கி வைக்கிறார். விழா முடிந்ததும் மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் வாயிலாக லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் நாளை (2ம்தேதி) வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
The post ஏர்போர்ட் புதிய முனையம் 2ம் தேதி திறப்பு; திருச்சிக்கு நாளை வருகிறார் பிரதமர் மோடி: 5 அடுக்கு பாதுகாப்பு அமல் appeared first on Dinakaran.