ஐ.டி. ரெய்டுகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது; திமுகவை யாராலும் அச்சுறுத்தவும் முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுகவை யாராலும் அச்சுறுத்த முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் விருதுகள் வழங்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; “முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவில் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத்தலைவரை அழைக்க முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார். ஒரு வாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பேன் என கூறிய அண்ணாமலையை ஏன் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கவில்லை.

அண்ணாமலை குறித்து பா.ஜ.க குறித்தும் வெளியான ஆடியோவிற்கு என்ன விளக்கம் அளித்தார்கள். அது குறித்து செய்தியாளர்கள் என்ன கேள்வி எழுப்பினீர்கள். வருமான வரித்துறை சோதனை மூலம் திமுகவை எப்போதும் அச்சுறுத்த முடியாது. இதுவரை நடந்த சோதனைகளில் யார் மீதாவது வழக்கு போடப்பட்டு உள்ளதா? யாரையாவது கைது செய்துள்ளார்களா? நடவடிக்கை எடுத்துள்ளார்களா? யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மீது ஏதாவது எப்.ஐ.ஆர்.போட்டு இருக்கிறார்களா? எதுவும் இல்லையே. திமுகவை யாரும் வாழ்த்துவதில்லை. அவ்வப்போது குற்றச்சாட்டு தான் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

நாங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லை. திமுக எப்போதும் குற்றச்சாட்டுகளை தகர்த்தெறிந்து பணியாற்றி வருகிறது. ஐ.டி. ரெய்டுகளால் தி.மு.க அஞ்சவில்லை. நேற்று கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த அண்ணாமலையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை” எனவும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

The post ஐ.டி. ரெய்டுகளுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது; திமுகவை யாராலும் அச்சுறுத்தவும் முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: