தமிழகத்தில் 3 நாள் வறண்ட வானிலை: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ காரணமாக கடற்பரப்பில் வெப்பம் பரவி வருகிறது. அதன் காரணமாக, கடல் பகுதியில் இருந்து வீசக் கூடிய குளிர்ந்த காற்று குறைவாக வீசுகிறது. தரைப்பகுதியில் நிலவும் வெப்பம், கடல் காற்றுடன் இணைந்து அதிக வெப்பத்தை வெளியிட்டு வருகிறது. அதிகபட்சமாக நேற்று திருப்பத்தூரில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் லேசான மழையும் பெய்துள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் வெப்ப நிலை என்பது 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. அதேபோல சென்னை, கன்னியாகுமரி, கரூர்,மதுரை, சேலம், திருப்பத்தூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இயல்பைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. இதேநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நீடிக்கும். சென்னையில் வெப்ப நிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

The post தமிழகத்தில் 3 நாள் வறண்ட வானிலை: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: