அந்தியூர் அருகே பரபரப்பு பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி விஏஓ ஆபீஸ் முற்றுகை

அந்தியூர், ஜூலை 27: அந்தியூர் அருகே பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி விஏஓ அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பொய்யேரிகரை பகுதி. இதில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தரக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த ஓராண்டாக வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் இதுவரையிலும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

இதனால் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மைக்கேல்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். தொடர்ந்து தகவலறிந்து அங்கு வந்த துணை வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் அந்தியூர் போலீஸ் எஸ்ஐ  கார்த்தி, விஏஓ சதீஷ்குமார்  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி, பாதையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி தர அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: