அரியலூர், மே 20: அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்டத்தில் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.2.42 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.
மேலும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கூட்டுபண்ணையத் திட்டத்தின் கீழ் சன்னாசிநல்லூர் உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.5 லட்சத்தில் வேளாண் கருவிகளையும், பயிர் விளைச்சல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நல்லநாயகபுரம் விவசாயி தனபால் என்பவருக்கு ரூ.15 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையையும், 2ம் பரிசு பெற்ற விவசாயி வேல்முருகன் என்பவருக்கு ரூ.10 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 487 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, செந்துறை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.43.91 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 13 தெருக்களுக்கான தார் சாலை அமைத்தல் பணி, முகப்பு வளைவு சீரமைத்தல், சமுதாயக்கூடம் சீரமைத்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகளையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கருப்பசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.