பெரம்பலூர்,மார்ச் 23: தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 15ஆம் தேதி மாலை முதல் அமலில் உள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணிஅளவில்,
துணை தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, பெரம்பலூர் தாலுகா, எசனை கிராமம், அரசலூர் ரோடு பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார்(30) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 51,280 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் அனிதா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
