குன்னம், மார்ச் 20: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.60 ஆயிரத்து 120 ரூபாயை பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்தனர். குன்னம் அடுத்துள்ள ஒதியம் பிரிவு பாதை அருகே எப்எஸ்டி 3 டீம் வட்டாட்சியர் சுதாகர் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமையன் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அதே ஊரைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சிவக்குமார் (45) என்பவரை சோதனை செய்த போது ரூபாய் 60 ஆயிரத்து 120 ரூபாய் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் குன்னம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சின்னதுரை வசம் ஒப்படைத்தனர்.
