ஒத்தி வைத்த கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

செய்யூர்: தமிழகம் முழுவதும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால், பல பகுதிகளில் கிராமசபா கூட்டங்கள் பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல், செய்யூர் ஊராட்சியிலும் வரவு செலவுக்கு குறித்து ஏற்பட்ட சலசலப்பால் கிராமசபா கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், செய்யூர் கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் திவாகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சுதா வரவேற்றார். கூட்டத்தில், மகளிர் சுய உதவி குழுவின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு, புதிதாக கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

தமிழக அரசு கொண்டு வந்த மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, பள்ளி கழிப்பறைகளை வாரம் ஒருமுறை தூய்மை படுத்த வேண்டும். கிராமத்தில் குடிநீர் வினியோகிக்கும் கைப்பம்ப், விசைப் பம்ப், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையில், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஊராட்சி வரவு செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டு, கிராமசபா கூட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது. இதில், ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், கவுன்சிலர் மோகனா கோபிநாத், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: