ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 100 பேருக்கு பணி ஆணை: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில் நகர்ப்புற ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 பேருக்கு, க.சுந்தர் எம்எல்ஏ பணி ஆணை வழங்கினார். உத்திரமேரூர்  பேரூராட்சி ஆணைப்பள்ளம் பகுதியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நகர்ப்புற பகுதிகளில் பணியாற்றுவதற்கான பணி ஆணை வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் சசிக்குமார் தலைமை தாங்கினார். காஞ்சி மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், செயல் அலுவலர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, நகர்புற ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 பேருக்கு பணி ஆணை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தை  கருத்தில் கொண்டு, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நகர்புற பகுதி மக்களுக்கும் வேலை வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, உத்திரமேரூர் போரூராட்சியில், 4200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், முதற்கட்டமாக தற்போது  100 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. மீதம் உள்ளவர்களுக்கு பின்னர் பணி ஆணை வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, வார்டு உறுப்பினர்கள் அறிவழகன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: