வேலூர், ஜன.26: வேலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 73வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழாவை எளிமையாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். சிறப்பாக பணிபுரிந்த போலீசார் மற்றும் அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. குடியரசு தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நேற்று விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. மேலும் கோட்டை கொத்தளத்தில் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் ஒத்திகை நடத்தப்பட்டது.