கோவை, ஜன. 22: தமிழகத்தில், மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோவையை சேர்ந்த ’கோட்டை அமீர்’ பெயரால் தமிழக அரசு சார்பில் “கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது” ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விருது, மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்துவரும் நபருக்கு, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, கோவை சாயிபாபாகாலனி பகுதியை சேர்ந்த முகமது ரபிக்கு (47) வழங்கப்பட்டுள்ளது. வரும் 26-ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், இவ்விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. முகமது ரபி, பல்சமய நல்லுறவு இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் கவுரவ தலைவராக பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஒருங்கிணைப்பாளராக எம்.எம்.ராமசாமி ஆகியோர் உள்ளனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் என பல சமயத்தை சேர்ந்தவர்கள் இந்த அமைப்பில் உள்ளனர். இது, ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும். அத்துடன், இந்திய கலாச்சார நட்புறவு இயக்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஆகியவற்றின் முக்கிய பொறுப்பாளராகவும் உள்ளார். இவர், சிறந்த சமூக சேவையாளர். கல்வி, மருத்துவம் என ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.