செந்துறையில் டீக்கடையில் காஸ் கசிவு

செந்துறை,டிச.31: அரியலூர் மாவட்டம் செந்துறை பேருந்து நிறுத்தம் அருகே ரவிச்சந்திரன்(55) என்பவர் 20 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல டீ காலையில் போட்டுக்கொண்டிருந்தார். காஸ் தீர்ந்து போனதால் புதிய சிலிண்டர் மாற்றியுள்ளார். அந்த சிலிண்டர் சரியாக பொறுத்தப்படாததால் காஸ் லீக்காகி சிலிண்டரில் தீ பற்றிக்கொண்டு மேற்கூரை அளவிற்கு குபீரென்று எரிந்தது. இதனை கண்ட டீ குடித்தவர்கள், அருகிலிருந்தவர்கள் என பலரும் பதறியடித்து ஓடினர். சிலர் துணிச்சலாக தண்ணீர் ஊற்றியும் சாக்குகளை நனைத்து தீயை அணைக்க முயன்றும் முடியாமல் போனதால் உடனடியாக செந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அழகானந்தம், ராஜசேகர், அருள்செல்வம் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: