பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

கோவை, டிச. 5: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவை ரயில் நிலையத்தில் நேற்று முதல் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதி (நாளை) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ரயில் நிலையத்தில் நேற்று ரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து ரயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பார்சல் அலுவலகங்களில் எந்த மாதிரியான பொருட்கள் அனுப்பப்படுகிறது? என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கோவை வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை நடத்தினர்.

வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் மற்றும் பயணிகள் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பாபர் மசூதி தினம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கையாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நாளை பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று நகர் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையாக சுமார் 2 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories: