கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி சண்முக சுந்தரம் மருதமலை ஆதிவாசி குடியிருப்பில் வாக்குசேகரிப்பு

தொண்டாமுத்தூர், மார்ச் 20:  கோவை வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் வடவள்ளி சண்முகசுந்தரம் நேற்று காலை  மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தார்.  அங்கு சுவாமி தரிசனம் செய்த பின்னர் அடிவாரத்தில் உள்ள ஆதிவாசி  குடியிருப்பு பகுதிக்கு சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளர்  வடவள்ளி சண்முகசுந்தரம் பேசுகையில், ‘‘வடவள்ளி பேரூராட்சியில் 3 முறை தலைவராக இருந்துள்ளேன். எனது மனைவியும் ஒரு முறை தலைவராக இருந்துள்ளார். 35 ஆண்டுகளாக பொதுப்பணியில் இருக்கிறேன். மக்கள் என்னை எளிதில் அணுகலாம்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி  நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களிடம் சூறாவளிபோல் சுழன்று தேர்தல் பணியாற்ற  வேண்டும். வீடு வீடாக சென்று திமுகவின் தேர்தல் அறிக்கையை  முன்னிலைப்படுத்தி, அதிலுள்ள அம்சங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளாக  மாற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் திமுக அனைத்து தொகுதியிலும் வெற்றி  பெறும். ஏன், மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளிலம் திமுக கூட்டணி  வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று வாக்குறுதி அளித்த  அனைத்து திட்டங்களையும் நிச்சயம் நிறைவேற்றுவார்’’ என தெரிவித்தார்.

பிரசாரத்தில்  திமுக பொதுக்குழு உறுப்பினர் குப்புசாமி, வட்ட செயலாளர் வேலுச்சாமி, ராஜா, செந்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் மகேஸ்குமார்,  பச்சைமுத்து, பரமேஸ்வரன், கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராமமூர்த்தி உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: