ஈரோடு, ஜூலை 23: ஈரோடு-பவானி சாலையில் விரிவாக்க பணிகள் முடிந்த இடங்களில் சென்டர் மீடியா அமைக்கப்பட்டு அதற்கு வண்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலைகள் அகலப்படுத்துதல், மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலை இரு மார்க்கத்திலும் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சாலையில் விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்று, கடந்த திமுக ஆட்சியில், ஈரோடு-பவானி சாலையில் 5.3 கி.மீ தூரத்திற்கு விரிவாக்கப்பணிகள் துவங்கப்பட்டது.
அதன்படி, பவானி சாலையில் பிளாட்டினம் மகாலில் இருந்து சுண்ணாம்பு ஓடை வரை குறுகலாக உள்ள சாலையை அகலப்படுத்துதல், கிறிஸ்து ஜோதி பள்ளி முதல் சத்தி சாலை சந்திப்பு வரை விரிவுப்படுத்துதல் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், விரிவாக்க பணிகள் நிறைவடைந்த இடங்களில் சென்டர் மீடியா அமைக்கப்பட்டு அதற்கு வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
