அந்தியூர் வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற 2 பேர் கைது

 

அந்தியூர், ஜூலை 31: அந்தியூர் அருகேயுள்ள கிணத்தடி பீட்டில், 100 கிலோ சந்தன மரங்களை வெட்டி கடத்த முயன்ற இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிணத்தடி பீட்டில், ரேஞ்சர் நந்தினி, தலைமையில் வன ஊழியர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிணத்தடி காப்புக்காட்டில், 100 கிலோ எடை கொண்ட இரண்டு சந்தன மரங்கள் மற்றும் 10 அடி மரக்கிளைகளை வெட்டி கடத்துவதற்காக, மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இவைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், சந்தன மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், அந்தியூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த சடையன் (40), அதே பகுதியை சேர்ந்த பிரபு (34) என்பது தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள விளாங்குட்டையை சேர்ந்த ராசு என்கிற செங்காயனை தேடி வருகின்றனர்.

 

Related Stories: