கோபி, ஜூலை 28: தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த படி தமிழ்நாடு அரசு முழுமையாக வேளாண் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோபி அருகே கூடக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக தேர்தல் வாக்குறுதியில், சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதமும் வேளாண் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என உத்திரவாதமாக முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சி அமைத்த பின், வாக்குறுதி படி பயிர் கடனை ரத்து செய்யாதது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
முழுமையாக வேளாண் பயிர் கடனை ரத்து செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கோபி அருகே உள்ள கூடக்கரையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசயிகள் கரும்புடன் வங்கியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் செல்வக்குமார் கண்டன உரையாற்றினார். பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனர்.வேளாண் பட்ஜெட்டில் பயிர் கடன் முழு தள்ளுபடிக்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இல்லையெனில் வரும் இடைத்தேர்தலில் விவசாயிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
