சிறுமியை கடத்தி திருமணம்; பட்டதாரி வாலிபருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை

திருச்செங்கோடு: சங்ககிரி அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த பட்டதாரி வாலிபருக்கு 24 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்ன கவுண்டனூர் வீரபாண்டியார் நகரில் வசித்து வந்தவர் ஹரி விஷ்ணு (21). இன்ஜினியரிங் பட்டதாரி. வெப்படையில் உள்ள மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே மில்லில் 14 வயதில் சிறுமியும் வேலை பார்த்து வந்தார். ஹரிவிஷ்ணு, சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த 30.11.21 அன்று கடத்தி சென்று முத்தையனூர் அருகே உள்ள காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது சிறுமியின் தாயார் புகாரளித்தார்.

இதையடுத்து, திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் ஹரி விஷ்ணுவை கைது செய்தனர். இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மைனர் பெண்ணை கடத்தி சென்றதற்காகவும், திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகவும் ஹரிவிஷ்ணுவுக்கு போக்சோ பிரிவின் கீழ் 24 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழில் வளவன் தீர்ப்பு கூறினார்.

Related Stories: