ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை; அமைச்சர், எம்எல்ஏக்களின் ரீல்ஸ் ஆட்டமே நடக்கிறது: தமிழிசை சாடல்

 

அவனியாபுரம்: தமிழகத்தில் ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தாமல், அமைச்சர், எம்எல்ஏக்கள் ரீல்ஸ் வெளியிடும் ஆட்டத்தை நடத்துகிறார்கள் என தமிழிசை தெரிவித்தார். பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை வடபழநி – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை, ஜூலை மாதம் பிரதமர் தொடங்கி வைப்பார். தமிழக அமைச்சர்கள் துறையின் பிரச்னைகளை தெரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். தமிழகத்தின் பல பல்கலைக்கழகங்களில் பிரச்னைகள் உள்ளது. ஆனால் உயர்கல்வித்துறை அமைச்சர் அவற்றை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார்.

இதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தவெக நிர்வாகிகள் ஆட்சி நடத்துவதில் கவனம் செலுத்தாமல் ரிலீஸ் வெளியிடுவதற்காக ஆட்டம் போடுகிறார்கள். இந்த பிரச்னை சரி செய்யப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை, மத ரீதியிலான பிரச்னையாக பார்க்காமல் இந்துக்களின் உணர்வாக பார்க்க வேண்டும். இதற்காக உச்ச நீதிமன்றம் வரை செல்வது தேவையற்றது. எனவே இதில் முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

‘அமைச்சர் யாருடன் ரகசிய உறவு வைத்து மின்வெட்டு தொடர்கிறது?’
தமிழிசை மேலும் கூறுகையில், ‘‘பாஜ – திமுக இடையே ரகசிய உறவு இருப்பதாக, அமைச்சர் நிர்மல்குமார் கூறுகிறார். அதுபோல் எந்த உறவும் எங்களுக்குள் இல்லை. நிர்மல்குமார் முதலில் மின்வெட்டு பிரச்னையை சரி செய்யட்டும். அவர் யாருடன் ரகசிய உறவு வைத்திருப்பதால் மின்வெட்டு தொடர்கிறது என்று தெரியவில்லை. யாருடன் உறவு வைத்து கோப்புகள் காணாமல் போகிறது என்றும் தெரியவில்லை. யாருடன் உறவு வைத்துக்கொண்டு சிபிசிஐடி விசாரணைக்கு ஒரு வாரத்திற்கு பிறகு செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை’’ என்றார்.

Related Stories: