கோவை, ஜூன் 19: கள்ளக்காதலை கண்டித்ததால் பெண்ணை தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவை வெள்ளலூர், துரைசாமி பிள்ளை லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (50). இவருக்கும், லாலி ரோடு விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கனகராஜ் (45) என்பவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. ஒரே பகுதியில் வசித்து வந்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கனகராஜுக்கு சமீபத்தில் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த சாந்தி, கனகராஜை கண்டித்துள்ளார். அந்தப் பெண்ணுடனான தொடர்பைக் கைவிட வேண்டும் என்று அவர் எச்சரித்ததால் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
கடந்த 16ம் தேதி, சாந்தி தான் முன்பு வசித்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்ததை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து லாலி ரோட்டில் உள்ள விநாயகர் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கனகராஜ், சாந்தியை வழிமறித்து இனிமேல் என் விஷயத்தில் தலையிடாதே என தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த கனகராஜ், தகாத வார்த்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த குடையால் சாந்தியை சரமாரியாக தாக்கினார்.
