காந்தல் குருசடி காலனி பகுதியில் புதர்மண்டி பயன்பாடின்றி காட்சியளிக்கும் கழிப்பிடம்

 

ஊட்டி, ஜூன் 15: ஊட்டி அருகேயுள்ள காந்தல் குருசடி காலனி பகுதியில் உள்ள கழிப்பிடம் புதர்மண்டி பயன்பாடின்றி காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் அவசர தேவைகளுக்காக நம்ம டாய்லெட் எனப்படும் நவீன கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. இவை ஆரம்ப காலங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சுகாதாரமாக இருந்தது. கால போக்கில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டது. இதனால், பல கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது.

இதன் காரணமாக இவற்றை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதில்லை. ஊட்டி காந்தல் அருகே குருசடி காலனியில் ஏராளமான அதிகளவிலான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நகராட்சி சார்பில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டது. இவை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் தற்போது முட்புதர்கள் வளர்ந்து பயன்பாடின்றி காட்சியளிக்கிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இந்த கழிப்பிடத்தை பராமரிப்பு சென்று பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: