மஞ்சூர்,ஜூன்16: மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட நாவல் பழங்களின் சீசன் துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுறங்களில் அடந்த காடுகள் நிறைந்துள்ளது. இந்த காடுகளில் கொய்யா, நாவல், விக்கி, பிச்சீஸ் உள்ளிட்ட பல வகையிலான பழ மரங்கள் உள்ளது. தற்போது இப்பகுதிகளில் நாவல் பழங்களின் சீசன் துவங்கியுள்ளது. நாவல் பழமானது வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தி இதய பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்தல் உள்ளிட்ட மருத்துவ குணங்கள் கொண்டதாகும்.
வனப்பகுதிகள் மற்றும் சாலையோர மரங்களில் கொத்து, கொத்தாக காய்த்துள்ள இந்த பழங்களை சிறுவர்கள்,பெரியோர்கள் என அனைத்து தரப்பினரும் பறித்து செல்கின்றனர். சிலர் மரங்களில் இருந்து பறித்து விற்பனை செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
