தென்காசி: தென்காசி மாவட்டம், பாம்புகோவில் சந்தை கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பூவையா (58). விவசாயியான இவர் நேற்று தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். கலெக்டர் கமல் கிஷோரிடம் ‘தன்னுடைய விவசாய நிலத்தில் அருகே உள்ளவர்கள் இடையூறு செய்து மகசூல் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை’ என்று கூறி கையில் கொண்டு வந்திருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசார், பூவையாவை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
