நீட் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்க ஜூன் 22 வரை அவகாசம்

புதுடெல்லி: நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தை திரும்ப பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்காக காலஅவகாசம் வருகிற 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப்படிப்புக்களுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து 12ம் தேதி இந்த தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் செலுத்திய நுழைவுத் தேர்வு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வு கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 27ம் தேதியுடன் முடிவடைந்தது.

சுமார் 13 லட்சம் மாணவர்கள் நுழைவு கட்டணத்தை திரும்ப பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தேர்வு கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. இதன்படி ஜூன் மாதம் 22ம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

* ஜூன் 1 முதல் சரிபார்ப்பு இணையதளம் – சிபிஎஸ்இ அறிவிப்பு
சிபிஎஸ்இ தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்ட அறிக்கையில் ‘‘மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வு முடிவுகளுக்கு பிந்தைய நடவடிக்கைகளான விடைத்தாள் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு உள்ளிட்ட பணிகளுக்கான இணைய தளத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்ப்பது மற்றும் மறுமதிப்பீடு செய்வது ஆகிய பணிகளை வெளிப்படையாகவும், பிழையின்றியும் உறுதி செய்யும்பொருட்டு அதற்கென ஒதுக்கப்பட்ட இணைய தளம் ஜூன் 1ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும். வெளிப்படையான மற்றும் பிழையற்ற செயல்முறையை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: