அருப்புக்கோட்டையில் 2 பெண்கள் உயிருடன் எரிப்பு: ஒருவர் கவலைக்கிடம்: மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

 

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் வீட்டு திண்ணையில் தூங்கிய இளம்பெண், நாத்தனார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சர்ச் தெருவை சேர்ந்தவர் சாந்தி (42). கோபாலபுரம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக உள்ளார். மகன் சந்தீப்குமார் (17), மகள் யாழினி (13). பாண்டியராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

அவரது அக்கா ஸ்ரீதேவி(45). இவரது கணவரும் இறந்து விட்டார். இதனால் சாந்தி வீட்டில் ஸ்ரீதேவி வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் காற்றுக்காக வீட்டுவாசலில் திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் வீட்டிற்குள் தூங்கினர். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஒரு மர்ம நபர், சாந்தி, ஸ்ரீதேவி ஆகியோர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பிச் சென்றார்.

தீப்பற்றி எரிந்ததில் வலி தாங்க முடியாமல் இருவரும் அலறினர். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டுஅருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 70 சதவீத காயத்துடன் சாந்தி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். ஸ்ரீதேவிக்கு 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தெருவுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது உறவினர்களுக்குள் பிரச்னையா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வீட்டு திண்ணையில் தூங்கிய 2 பெண்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: