பெரம்பூர்: அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பச்சைக்கல் வீராசாமி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் மதுக்கடைகளை மூடிய பின்பு கள்ளச் சந்தையில் மதுபானம் விற்கப்படுவதாக அயனாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எஸ்ஐ மேகநாதன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்று சரித்திர பதிவேடு ரவுடி ஒருவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிடிபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தாவூத் உசேன் என்கின்ற சேட்டு (35) என்பதும், இவர் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இவர் இரவு நேரங்களில் மதுக்கடைகளை மூடிய பின்பு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தாவூத் உசேன் என்கின்ற சேட்டு மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
