சேலம்: சேலம் நரசோதிப்பட்டி அசோக் நகரைச் சேர்ந்தவர் ராஜா மனோகரன். தமிழக வெற்றிக்கழகத்தின் இடைப்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக உள்ளார். இவர் நேற்று, இடைப்பாடி தொகுதியின் தவெக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் பிரவீன்குமாருடன், சேலம் எஸ்பி அலுவலகத்திற்கு வந்து அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தவெக, இடைப்பாடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரவீன்குமாருக்கு ஆதரவு தெரிவித்தது. கட்சியின் தலைமை, என்னை அந்த தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது.
நேற்று முன்தினம் (2ம் தேதி) வாக்கு எண்ணிக்கைக்காக அடையாள அட்டை பெற, தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் திரும்பினேன். இடைப்பாடி-கொங்கணாபுரம் சாலையில் ரெட்டிப்பட்டி அருகே சிறுநீர் கழிக்க சாலையோரம் நின்றேன். அப்போது என்னை பின் தொடர்ந்து, 2 பைக்குகளில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர், சேலத்தில் இருந்து இடைப்பாடிக்கு வந்து கட்சி வேலை பார்க்கிறீயா, ஒழுங்காக வீடுபோய் சேரமாட்டாய், அறுத்து போட்டு விடுவோம் என மிரட்டினர்.
அந்த நேரத்தில் அவ்வழியாக வாகனங்கள் வந்ததால், அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது, அவர்கள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, எனக்கும், தவெக ஆதரவு வேட்பாளர் பிரவீன்குமாருக்கும், கட்சியினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் அதிகாரிகள் கூறி, அவர்களை அனுப்பி வைத்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் இடைப்பாடி சட்டமன்ற தேர்தலில் தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை அதிமுகவினர் விலை பேசி வாங்கி விட்டதாக, தவெகவினர் புகார் தெரிவித்தனர். அதன் பின்னரே, சுயேச்சை வேட்பாளர் பிரவீன்குமாருக்கு தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்தார். கட்சியினரும், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். தற்போது வாக்கு எண்ணிக்கையின் போது, வேட்பாளருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
