நாகர்கோவில்: தமிழகத்தில் வரும் 2026-2027 கல்வியாண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் பாட வல்லுநர்களைக் கொண்டு விவாதங்கள் நடத்தப்பட்டு, மாநிலப் பாடத்திட்டத்தைச் சர்வதேச தரம் மற்றும் பிற மாநில வாரியங்களின் பாடத்திட்டங்களுடன் ஒப்பீடு செய்யும் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களை ஆய்வு செய்து இறுதி செய்வதற்கான சிறப்புப் பணிமனைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இம் மாதம் நடைபெற உள்ளன. முதல் கட்டமாக மே 11-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக மே 18 முதல் மே 22-ம் தேதி வரையிலும் இந்தப் பணிமனைகள் நடைபெற உள்ளன.
இதில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி விரிவுரையாளர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் என 100-க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்கின்றனர். கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல் மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட அனைத்து முக்கியப் பாடங்களுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுப் புதிய பாடப்பகுதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தப் பணிமனையில் பங்கேற்கும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களை உரிய நாட்களில் பணி விடுப்பு செய்யுமாறு பல்கலைக்கழகப் பதிவாளர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மாறிவரும் உலகளாவிய கல்வித் தேவைகளுக்கும், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளுக்கும் தமிழக மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், மிகச் சிறந்த முறையில் இந்தப் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
