டெல்லி: தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 234 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், நகை, கொலுசு, குடம், வெள்ளி குத்து விளக்கு, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்றவற்றை லஞ்சமாக கொடுத்தும், இலவசங்களை அறிவித்தும் வாக்கு கேட்டு வாக்காளர்களை ஏமாற்றி வருகின்றனர்.
இலவசங்களை அறிவிப்பதும், வழங்குவதும் அரசியல் சாசன விதிகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கும் எதிரானது என்று அவர் வாதிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருவதால், தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யத் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை தேர்தல் நடைமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தேர்தல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.
