சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் துறைமுகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சினோரா பி.எஸ்.அசோக் நேற்று தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டார். மாலை 5:30 மணிக்குத் துறைமுகம் தொகுதியில் மண்ணடி ஜார்ஜ் டவுன் பவளகாரத் தெரு தொடங்கி, ராமசாமி தெரு, புது தெரு நைனியப்பன் தெரு, கச்சாலீஸ்வரர் தெரு மற்றும் சாலைவிநாயகர் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் மலர்களைத் தூவியும், விசிலடித்தும் வரவேற்றுத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
பரப்புரையில் பேசிய சினோரா பி.எஸ். அசோக், ‘தவெக தலைவர் விஜய் மக்கள் சேவையை பார்த்தே நான் அரசியலுக்கு வந்தேன். நான் எந்த விதத்திலும் ஊழல் செய்யமாட்டேன். தியாகராய நகரில் என்னை பற்றி விசாரித்துப் பாருங்கள். மக்களுக்காக சேவை செய்யவே வந்துள்ளேன். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெறுவோம். தலைவர் விஜய் முதல்வரான பிறகு மே 4ம் தேதிக்குப் பின் தொகுதிக்கு வருவேன்; உங்களுடைய தேவை அனைத்தையும் கேட்டறிந்து உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன் இது என் தாய் மீது ஆணை. நான் என்னுடைய மத அடையாளத்தை மறைக்கமாட்டேன்.
எல்லா மதத்தையும், மக்களையும் மதிப்பேன். ஜாதி, மத வேற்றுமை பார்க்கமாட்டேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கடைப்பிடிப்பேன். வாக்கு சதவீதம் அதிகம் இருக்கும் மக்களே நீங்கள் இதுவரை ஆண்டவர்களை நம்பி ஏமாந்தது போதும் ஒருமுறை எங்களுக்கு வாக்களியுங்கள். என்னுடைய பெயரில் சிலரை நிறுத்தியுள்ளார்கள்; அவர்களுக்குத் தெரியவில்லை எனக்காக வாக்கு, இல்லை தவெக தலைவர் தளபதி விஜய்யின் முகத்திற்காக தான் வாக்கு என்பதை மறந்துவிட்டார்கள் போல. இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பரப்புரையின் போது தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
